sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    June 25

    நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 4

    முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3

    இரண்டாம் பத்து வந்ததுன்னா, முதல் திருவாய்மொழி,

    வாயும் திரையுகளும் * கானல் மட நாராய் *
    ஆயும் அமர் உலகும் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் *
    நோயும் பயலைமையும் * மீதூர எம்மேபோல் *
    நீயும் திருமாலால் * நெஞ்சம் கோள் பட்டாயே

    (திருவாய்மொழி 2.1.1)

    பெருமானை விட்டுப் பிரிந்த விரகத்திலே ஆழ்வார் துடிக்கிறார்.  விரக தாபத்தை ஆற்றிக்கொள்ள வீட்டை விட்டுட்டு, இங்க இருந்தா ரொம்ப ஞாபகம் வருதுங்கிறதுக்காக வீட்டை விட்டுட்டு தாமிரபரணிக் கரையோரமாப் போனார்.  அவர் திவ்யதேசம் தாமிரபரணிக் கரையிலதான்.  அதனால அங்க போனார்.  சாயங்கால வேளை.  அஞ்சு மணிக்கு வீட்ல விளக்கேத்தி வச்சுட்டார், சாயாங்காலம் அங்க போறார்.  வேகமா ஜலம் ஓடிண்டு இருக்கு.  காத்து அங்கயும், இங்கேயும் ஓடறது.  ஒரு மீன் கிடைக்கற வரைக்கும் நாரை, ஒரு கொக்கு நின்னுண்டு இருக்கு.  அந்தக் கொக்கு வெளுப்பா இருந்ததோல்லையோ, அந்தக் கொக்கைப் பார்த்து ஆழ்வார் கேட்கறார்.  என்னைத்தான் இந்தப் பெருமான் ஏமாத்திட்டார்ன்னா, கொக்கே உன்னையும் ஏமாத்திட்டார் போலருக்கே?  கொக்கு கேட்டது, என்னை என்ன ஏமாத்தினார்ன்னு.  பெருமானையே தெரியாது இந்தக் கொக்குக்கு.  அது ஏதோ வெளுப்பா நின்னுண்டு இருக்கு.  ஏன்னா எப்பவும் நாயகிக்கு நாயகனான பகவானைப் பிரிந்தால் உடம்பு வெளுத்துப் பசலை நோய்ன்னு வரும்.  நீங்க தமிழ் இலக்கியத்தில பார்த்தீள்ன்னா பசலை நோய் காண்பதுங்கிறது முக்கியம்.  அது உடம்பு வெளுத்துப் போய்டும்.  இந்த நாரை உடம்பு வெளுத்திருக்கோல்லையோ, திருமால் இதை வஞ்சிஞ்சிட்டபடியால்தான் இதுக்கு உடம்பு வெளுத்துப் போச்சுன்னு நினைச்சுட்டார் ஆழ்வார்.  நாரை எப்பவுமே வெளுப்பாத்தான் இருக்கும்.  ஆனா அதைப் பார்த்த இவருக்கு என்ன தோண்றது?  நானும் வெளுத்துப் போய்ட்டேன், நாரையும் வெளுத்துப் போச்சு. நாரையோட கழுத்தைக் கட்டிண்டு ‘ஓ’ன்னு அழறார்.  நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே – திருமால் உன்னையும் வஞ்சிஞ்சிட்டார் போலருக்கே.  என்னைத்தான்னு நினைத்தேன், உன்னையுமா வஞ்சித்தான்னு அழுதார்.  பக்கத்துல காத்து வேகமா ஓடிண்டிருந்தது.  காத்தைப் பார்த்துட்டு, நானும்தான் அந்த பகவானை எங்கே எங்கேன்னு தேடி ஓடிண்டிருக்கேன்னா, காற்றே நீயும் தேடி ஓடுகிறாய் போலிருக்கிறது, என்று ‘காற்றும் கழியும் கட்டியழ கொண்ட பெரும் காதலுக்குப் பற்றிய நூல் வரம்பில்லை’ என்று ஒரு நூல் வரம்பு சொல்ல முடியாமல், இன்னதுதான் கிரமம், பக்தி இப்படித்தான் இருக்கும்ன்னு ஆழ்வாரிடத்திலே சொல்லமுடியலே.  இப்போ உபாசனம்ன்னால் ரிஷிகள் இப்படியெல்லாமா அழுவா?  அவாளுக்கு தியானம் தெரியும், உபாசனம் தெரியும், பக்தி தெரியும்.  ஆனா யாரும் காத்தையும், கழியையும் கட்டி அழப் போறதில்லே.  ஆனா இவர் இப்படி அழுகிறாரேன்னு சொன்னா, அது ஞானப்பேச்சைக் காட்டிலும், பிரேமப் பேச்சுக்கு இருக்கற ஏற்றம்.  இதுனால மோக்ஷம் கிடைச்சுடுமா?  தாமிரபரணி ஆற்றங்கரையில போய் நாரை கழுத்தைக் கட்டிண்டு அழுதுண்டிருக்காரே, இதுனால மோக்ஷமான்னு கேட்டால், மேலே சொன்ன ரிஷி மோக்ஷமடைவரான்னு கேட்கணுமே தவிர, இதுல சந்தேகமேபடக் கூடாது.  ஏன்னா ரிஷி ஞானத்தோடே பேசிண்டிருக்கார், அவருக்குண்டானதுதான் கிடைக்குமா, கிடைக்காதான்னு சந்தேகம்.  ஆனால் இங்கே இவர் வேற வழியற்று பக்தி மேலீட்டாலே பேசுகிறபடியால், இதுக்குத்தான் நிச்சயம் மோக்ஷமுண்டுன்னு சொல்லுவர்கள்.

    அதனாலே காற்றாகட்டும், நாரையாகட்டும், குருகாகட்டும், இதெல்லாம் இரண்டாம் பத்து ஆரம்பத்துல அழுதார்.  பார்த்ததுக்கு இங்க இருக்கற எல்லாருமே பெருமாளைப் பிரிஞ்சு கஷ்டப்படறா போலருக்கு.  நான் ஒருத்தி மட்டும்தான்னு நினைச்சிண்டிருந்தேன்.  அது இல்லே.  இந்த ஊரிலே தாமிரபரணியும் கஷ்டம்தான் படறது, நாரையும் கஷ்டம்தான் படறது, குருகும் கஷ்டம்தான் படறது.  இதைவிட நாம இருக்கற இடமே தேவலைன்னு தோணிப்போய்டுத்து ஆழ்வாருக்கு.  வீட்டிலே இருக்க வேண்டாம்னுட்டு சாயங்காலம் கிளம்பி வந்தாரோல்லையோ?  மணி பதினோரு மணி.  திரும்பிப் போனார்.  சாயங்காலம் விளக்கேத்தி வச்சது, திரும்பிப் போய் இப்போ விளக்கைத் தொட்டா கொதிக்காதா?  வெங்கல விளக்கு.  தொட்டவுடனே ஒரே கொதிச்சது.  அதைப் பிடிச்சுட்டு அழுக ஆரம்பிச்சுட்டார். நான்தான் ஜுரத்தில கொதிக்கிறேன்னா, நீயும் ஜுரத்திலே கொதிக்கிறே போலருக்கு.  உன்னையுமா பகவான் வஞ்சித்துவிட்டான்னு அதையும் கட்டி அழுதார்.  இது ரெண்டாம் பத்திலே.  இந்த ரெண்டாம் பத்திலேயே தாயார் பாசுரம் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம். தாய்ப்பாசுரத்தில்,

    ஆடியாடி * அகம் கரைந்து * இசை
    பாடிப்பாடி * கண்ணீர் மல்கி * எங்கும்
    நாடிநாடி * நரசிங்கா! என்று *
    வாடிவாடும் * இவ்வாள் நுதலே

    (திருவாய்மொழி 2.4.1)

    இது பொண்ணு படற பாட்டைக் கண்டு சகிக்காம தாயார் சொல்றது.  ஏனா இந்த நாயகனை விட்டுப் பிரிந்து நாயகி ரொம்பத் துடிக்கிறா.  பார்த்துண்டிருக்கறதுக்கு தாயாரால முடியலே.  பெண்ணே, வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னேனே, கேட்டியா?  ஆறி இருந்திருக்க வேண்டும்.  நீ சமாதானப் பட்டிருக்க வேண்டாமா?  அப்படின்னு பக்கத்து வீட்டுக்காரிக்கெல்லாம் இந்தப் பொண்ணு படற பாட்டை தாயார் சொல்லிக்கிறா.  இவ நினைவோட இருக்கப்போ எப்படி இருந்திருப்போ.  இப்ப நினைவற்று மூர்ச்சையா கிடக்கா, எப்படி இருக்கா, இதைத் தாயார் சொல்லுகிறாள்.  ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி – பகவன் நாமத்தைப் பாடிப்பாடி கண்கள்லேர்ந்து ஜலம் கொட்டக் கொட்ட, எங்கும் நாடிநாடி நரசிங்கா என்று வாடிவாடும் இவ்வாள் நுதலே.  அடுத்த பாட்டிலே, வாள் நுதல் இம்மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – இம்மடவரவள் உம்மைக் காணும் ஆசையால்தானே நைகின்றாள்.  வேற எதை ஆசைப்பட்டுட்டா?  உம்மைத் தானே ஆசைப்பட்டா.  ஆசைப்பட்டவர் அனுகிரகிக்கறதுதானே ஸ்ரீமந்நாராயணனான உமக்குக் கடமை.  ஆனா இந்தப் பெண்ணை இப்படிப் பண்ணிட்டீரேன்னு தாயார் ரொம்ப வருத்தப்பட்டு பத்துப் பாசுரங்கள்.  இது ரெண்டாம் பத்திலே நடந்தது.

    பத்துப் பத்துக்குள்ளே மூன்றாம் பத்தில் மட்டும் நாயகி பாவம் கிடையாது.  நாலாம் பத்தில் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம் பாடினார்.

    ஏறாளும் இறையோனும் * திசைமுகனும் திருமகளும் *
    கூறாளும் தனியுடம்பன் * குலம் குலமா அசுரர்களை *
    நீறாகும் படியாக * நிருமித்துப் படைதொட்ட *
    மாறாளன் கவராத * மணி மாமை குறைவிலமே

    (திருவாய்மொழி – 4.8.1)

    அதாவது இந்தப் பெண்ணினுடைய வளையல், அவள் நிறம், அவள் மேலங்கி, அவள் போட்டிருந்த அட்டிகை, அவள் போட்டிட்ருந்த மூக்குத்தி, அவள் தலையில போட்டிட்ருந்தது, அவளுடைய அழகு, அவளுடைய நினைவு, இது இத்தனையும் பெருமாள் பறிச்சிண்டு போய்ட்டாராம்.  அதைப் பார்த்து நான் ஒன்னொண்னையும் இழந்துட்டேன், இழந்துட்டேன்னு, இந்தப் பெண் பாடிக்கொள்ளுகிறாள்.  இது ஏறாளும் இறையோனும் பதிகம்.  இதே போல திருமங்கையாழ்வாரும் பாடி இருக்கார்.  அப்புறம் பார்ப்போம்.  ஏறாளும் இறையோனும் பதிகம் முழுக்க, தான் ஒன்னொண்னையும் இழந்துட்டெங்கிறதைத் தெரிவித்தார்.  அதிலே ரொம்ப ஆச்சர்யமான பதிகம்ங்கிறது, கீழே சொன்னேனோல்லையோ, என்றோ நடந்ததை இன்னைக்கு நடந்ததா நினைச்சுனுடறாள்ன்னுட்டு.  பக்கத்திலே தன்னுடைய மண்ணைத் துழாவி துழாவிப் பார்க்கிறா.  இதுவும் தாயார் சொல்றது இப்போ.  ஆழ்வார் திருநகரியிலே உட்கார்ந்துட்டிருக்கார் நம்மாழ்வார்.  அவர் தான் ஊர் மண்ணைத் துழாவுறாராம்.  துழவிப் பார்த்துட்டு இதுதான் வாமனன் அளந்த மண்ணுங்கிறார்.  அது நடந்தது கிருத யுகத்திலே. ஆழ்வார் இருக்கறது துவாபரயுகம் முடிஞ்சு, கலியுகத்தின் ஆரம்பத்திலே.

    மண்ணை இருந்து துழாவி *
    வாமனன் மண்ணிதென்னும் *
    விண்ணைத் தொழுதவன் மேவு *
    வைகுந்தம் என்று கை காட்டும் *
    கண்ணையுண்ணீர் மல்க நின்று *
    கடல் வண்ணன் என்னும் அன்னே! * என்
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு *
    என்செய்கேன் பெய் வளையீரே

    (திருவாய்மொழி – 4.4.1)

    ஆகாசத்தைப் பார்த்துட்டு இதுதான் ஸ்ரீவைகுண்டம், தெரியாதா, அப்படின்னு கைகூப்பிக்கிறாளாம்.  பக்கத்தில இருக்கற மண்ணைத் துழாவித் துழாவி பார்த்துட்டு வாமனன் அளந்த மண் இதுதான்கிறாளாம்.  இதோட எல்லாம் இல்லே.  இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு பைத்தியம் பிடிச்சுடுத்தோ தெரியலே.  அங்க ஓடிண்டிருக்கு ஒரு கன்னுக்குட்டி.  கன்னுக்குட்டியைக் கெட்டியா கட்டிப்பிடிச்சிண்டு கண்ணன் மேய்த்த கன்னுக்குட்டி இதுதாங்கிறா.  பாம்பு ஒன்னு ஓடிண்டிருக்கு.  அது பின்னாலயே ஓடி கண்ணன் சயனிச்சிண்டிருக்கற ஆதிசேஷன் இதுதான்னு சொல்றா.  யாராவது குழல் ஊதிட்டுப் போனா, பகவானே குழல் ஊதுறான்னு சொல்லும்.  எங்கேயாவது வெண்ணையைப் பார்த்தா பகவான் சாப்பிட்ட வெண்ணை இதுதான்னு சொல்றா.  இப்படி ஏறிய பித்தினோட என் பெண்ணோட நான் படறது போறலே, இதை எப்படித் தீர்க்கப் போகிறேன்னு தெரியலேன்னு தாயார் பக்கத்து வீட்டுக்காரியினிடம் சொல்லிக் கொள்ளுகிறாள்.  இதுவும் நாயகி பாவத்திலே நாலாம் பத்திலே பாடினதுதான்.

    ஐந்தாம் பத்திலே பல பதிகங்கள்.  இதிலேதான் மடலெடுத்தார் ஆழ்வார்.  மடலெடுப்பதில் தமிழர்களுக்கு ஒரு மரபு, சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு ஒரு மரபு.  தமிழ் இலக்கியத்திலே என்னதான் இருந்தாலும் பெண் மடலெடுக்க மாட்டாள்.  ஆண்தான் மடலெடுக்கலாம்.

    கடலென்ன காமத்தராயினும் மாதர் மடலூரார்
    மற்றையார் மேல்.

    கடல் போன்ற காமம் இருந்தாலும் பெண்கள் மடல் ஊர மாட்டார்கள், ஆண்கள்தான் மடலூருவார்கள்ங்கிற்து தமிழர் மரபு.  ஆனால் சம்ஸ்கிருத இலக்கியத்திலே ஸ்திரீ மடலெடுக்கறது, புருஷன் மடலெடுக்கறது ரெண்டுமே ஏத்துக்கறா.  இதுனால திருமங்கையாழ்வார் சிறிய திருமடல், பெரிய திருமடல் ரெண்டு பாடினார்.  அவர் ஒரு பாட்டில சொல்லிட்டார்.  நாங்கள் கண்டிப்பா வடநெறியே வேண்டினோம், தென்னெறி இதுக்கு வேண்டாம்னுட்டார் அவர்.  ஏன்னா தென்னெறிங்கறது தமிழ் பாஷைப் படியோல்லையோ?  தென்னெறிப்படி நான் பாட்டுப் பாடறதா இல்லே.  அப்படின்னா இவர் பெண். பெண் பாவனையிலே மடலெடுக்கறது கூடாது, தமிழ் இலக்கியத்தின்படி.  ஆனா சம்ஸ்கிருத இலக்கியத்தின்படி பெண் பாவனையிலே மடலெடுக்கலாம்.  மன்னு வடநெறியே வேண்டினோம் – நான் இந்தப் பிரபந்தம் பாடற வரைக்கும் சம்ஸ்கிருதனாகவே பாடிட்டுப் போறேன்னுட்டார்.  மடலெடுக்கறது தமிழ்லதான்.  ஆனா தான் நினைச்சிண்டிருக்கறது சம்ஸ்கிருத இலக்கியத்தின்படியே பாடுவேன்னு சாதித்தார்.  என்னத்துக்காக இப்படி நடக்கறதுன்னு சொன்னா, சாதாரணமா லோகத்தில இருக்கற பெண்களெல்லாம் மடலெடுக்கறது இல்லையே.  ஆனா ஆழ்வார்கள் நாயகி பாவத்திலே மடலெடுத்திருக்காளே?  என்ன வித்தியாசம், மரபை மீறலாமாங்கிற சந்தேகம் வரும்.  மரபை மீறுவதற்கு ஒரு காரணமுண்டு.  லோகத்துப் பெண்கள் மடலெடுக்கறதெல்லாம் யாரைப்பத்தி?  ஏதோ ஒரு புருஷனைப்பத்தி.  இங்கிருக்கற யாரையோ பத்தித்தானே மடலெடுத்தாகனும்?  இவாளுக்கெல்லாம் அவ்வளவு பெருமை இல்லே, மடலெடுக்க வைக்கிற அளவுக்கு.  நாயகனுக்கு அத்தனை பெருமை இருந்தா பெண் மடலெடுக்கலாம்.  ஒன்னும் இல்லே அந்த மாதிரி, அதனாலே யாருக்கும் மடலெடுக்கறதில்லே.  ஆனா ஸ்ரீமந் நாராயணன் அப்படியா?  பார்த்தவுடனே மடலெடுக்க வைக்கிறானோல்லையோ?  அதனாலதான் பரகால நாயகியோ, பராங்குச நாயகியோ மடலெடுத்தார்கள்.  இது லௌகீக விஷயமாயிருந்தா புரியாது.  இது பகவத் விஷயமா இருக்கிறபடியாலே பெண் மடலெடுத்தலும் கூடும்ன்னு வைத்துக் கொள்ள வேண்டும்.

    இதைத்தான் ஐந்தாம் பத்தில், மூன்றாம் திருவாய்மொழியில்,

    மாசறு சோதி * என் செய்யவாய் மணிக்குன்றத்தை *
    ஆசறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே *
    பாசறவெய்தி * அறிவிழந்தெனை நாளையம் *
    ஏசறு மூரவர் கவ்வை * தோழீ! என் செய்யுமே

    (திருவாய்மொழி – 5.3.1)

    எத்தனை நாட்களாக அறிவிழந்து கிடந்தேன்.  இந்தப் பெருமானை எப்படியாவது அடைஞ்சுடனும்ன்னு மடலெடுக்கத் தொடங்கினாள்.  அதிலேர்ந்து மூன்று பதிகம், மடலெடுக்கறதுக்காக ஆரம்பிச்சார்.  சாயங்காலம் வந்துடுத்து.  ராத்திரியாயிருந்து மடலெடுத்து என்ன லாபம்?  யார் பார்ப்பா?  அதனால நிறுத்தினுட்டார்.  மறுபடியும் மகள் பாசுரம்தான்.

    ஊர் எல்லாம் துஞ்சி * உலகெல்லாம் நள்ளிருளாய் *
    நீர் எல்லாம் தேறி * ஓர் நீள் இரவாய் நீண்டதால் *
    பார் எல்லாம் உண்ட * நம் பாம்பணையான் வாரானால் *
    ஆர் எல்லே! வல்வினையேன் * ஆவி காப்பார் இனியே

    (திருவாய்மொழி – 5.4.1)

    இந்த ஆவியை இனிமே யாரு காக்கப் போறார்ன்னு தெரியலே.  ராத்திரி வந்துடுத்து.  கண்ணனும் வாரானால், காகுத்தனும் வாரானால் – கண்ணன் இரட்சிக்கறதுக்கு வரலே, காகுத்தன் இரட்சிக்கறதுக்கு வரலே.  இனிமே நான் முடிஞ்சு போய்ட வேண்டியதுதான் போலருக்குன்னு ஐந்தாம் பத்திலே நாலாம் திருவாய்மொழி பாடினார்.  அதுக்கடுத்ததும் மகள் பாசுரம்தான்.  ரொம்ப ஆச்சர்யமான பாசுரம், திருக்குறுங்குடி நம்பிக்காக.  திருக்குறுங்குடி நம்பியை நினைத்தே பத்துப் பாசுரங்கள் பாடினார்.

    எங்ஙனேயோ அன்னைமீர்காள்! * என்னை முனிவது நீர் *
    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை * நான் கண்டபின் *
    சங்கினோடும் நேமியோடும் * தாமரைக் கண்களோடும் *
    செங்கனி வாய் ஒன்றினோடும் * செல்கின்றதென் நெஞ்சமே

    (திருவாய்மொழி – 5.5.1)

    என் நெஞ்சம் என்னிடத்திலே இல்லை.  அன்னைமீர்காள், எனக்கு நீங்க உபதேசிக்காதீங்கோ.  அவள் பார்த்து இரு, இரு, ஆறியிருங்கறாளோல்லையோ?  இது எதுக்கு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீள் நீங்க இப்போ?  சொன்னா காது எங்கிட்ட இருக்கணும், சொல்லணும்.  மனசு எங்கிட்ட இருக்கணும், சொல்லணும்.  இந்த மனசும், செவியும், கண்ணும் என்றோ நம்பி பின்னே போயிற்று.  நீங்கள் சொல்றது எதுவும் என் காதிலே ஏறப்போறது கூட கிடையாது.  நீங்கள் உங்கள் கோணத்திலேயே பார்க்கிறேளே தவிர, இந்த பாட்டிலே சொல்றார் பாருங்கோ.

    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் * என்னை முனியாதே *
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை * நான் கண்டபின் *
    மின்னும் நூலும் குண்டலமும் * மார்வில் திருமறுவும் *
    மன்னு பூணும் நான்கு தோளும் * வந்தெங்கும் நின்றிடுமே

    (திருவாய்மொழி – 5.5.2)

    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் – எந்தப் பொண்ணும் இதைத்தான் முதல்ல சொல்லும்.  என் கோணத்திலேர்ந்து பாருங்கோ.  நீங்க உங்க வயசானவா கோணத்திலேர்ந்தே பார்த்திட்டு இருந்தேள்ன்னா, நாங்க என்ன சொல்றோம்ன்னு பாருங்கோன்னு பொண்ணு சொல்றதோல்லையோ?  இது இன்னைக்கில்லே இவா சொல்றது.  5108 வருஷத்துக்கு முன்னாடி ஆழ்வார் பாடினார்.  ஆனா வித்தியாசம், இது லௌகீகம், அது வைதீகம்.  என் நெஞ்சத்திலேர்ந்து பாருங்கோ.  பகவானிடத்திலே நெஞ்சம் போய்ட்டதுனாலே இனி நீங்க சொல்றது கேட்காதுனுட்டு, ரொம்ப ஆச்சர்யமான பத்துப் பாசுரம், திருக்குறுங்குடி நம்பிக்கு.  திருக்குறுங்குடி நம்பி பெருமானே அழகு.  அந்தப் பெருமானேதான் பராங்குச நாயகியாகப் பிறந்ததாக ஐதீகம்.  ஏன்னா ஆழ்வாருடைய தாயாரும், தகப்பனாரும் திருக்குறுங்குடி நம்பிகிட்டதான் போய் பிரார்த்திச்சிண்டா, நமக்கு குழந்தைப் பேறில்லே, வேணும்ங்கிறதுக்காக.  உடைய நங்கையார், காரி, இவா ரெண்டு பேரும் போய் நம்பியினிடத்திலே கேட்கறா.  யாரைப் போல பிள்ளை வேணும்ன்னு திருக்குறுங்குடி நம்பி கேட்கறார்.  சட்டுன்னு தாயார், உன்னைப் போல வேணும்ன்னார்.  நம்பி யோசித்தார், என்னைப் போல உலகத்திலே யாரும் இல்லே.  நானே பொறந்தாத்தான் உண்டு.  என்னைப் போல இன்னொருத்தர் இருந்தா நான் அனுப்பிச்சு வைக்கலாம்.  இருக்கறது நாம். அதனால நாமே பராங்குச நாயகியாகப் பிறப்போம்ன்னு நம்மாழ்வாராகப் பிறந்தார்ன்னு ஐதீகம்.  அந்த எம்பெருமானுக்காக ஐந்தாம் பத்தில் ஐந்தாம் திருவாய்மொழி பாடினார்.  அப்போ 5.3, 5.4, 5.5 மூன்றுமே நாயகி பாவத்திலே பாடினதுதான்.

    அதுக்கு அப்புறம் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி வந்தது.  அதுலதான் அனுகாரம் பண்றார்.  அனுகாரம்ன்னா பெருமாளாவே தன்னை நினைச்சினுடுவார்ன்னு பார்த்தோமே.  அப்படியாவது பிரிவாற்றாமையைக் குறைச்சுக்கலாமாங்கிறதுக்காக.

    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் *
    கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ *
    கடல் ஞாலத்தீர்க்கிவை என் சொல்லுகேன் *
    கடல் ஞாலத்தென் மகள் கற்கின்றவே

    (திருவாய்மொழி – 5.6.1)

    இது தாய்ப் பாசுரம்.  தாய்ப் பாசுரம்ன்னா, தாயார் மகளைப் பார்க்கிறா.  மகள் இப்படிக் கை வைச்சிண்டு உட்கார்ந்தாளாம்.  நாந்தான் உலகத்தை எல்லாம் சிருஷ்டிச்சேன், நாந்தான் உலகத்தை எல்லாம் அழிச்சேன், நாந்தான் உலகத்தை எல்லாம் காக்கிறேன்னா, இவளுக்கு பயம் இப்போ.  ஓ, பொண்ணுக்கு என்ன புடிச்சுடுத்தோ தெரியலையே இப்போ.  ஏன்னா இவ சிருஷ்டித்தேன், இவ அழிச்சேன்னா, ஏன்னா இதெல்லாம் பெருமாள் பண்றதுன்னான்னா, அப்போ அவனாகவே தன்னை நினைத்துக் கொண்டு பெண் பாடறா.  அப்படிப் பெண் கஷ்டப்படறாளே, பாடறாளேங்கிறதைத் தாயார் சொல்லிக்கிறா இப்போ.  ஏன்னா பாட்டில என்ன இருக்கு?  கடல் ஞாலம் செய்தேனும் யானே, என்னும் - இந்த ‘என்னும்’ன்னு சொன்னா, மகள் சொல்றதா தாய் சொல்றான்னு அர்த்தம்.  கடல் ஞாலம் செய்தேனும் ஞானே – இது மகள் சொல்லுவள்.  என்னும் – தாய்ப் பாசுரம்.  இந்த ‘என்னும்’ எங்க வந்தாலும் அப்ப அங்க தாயார் பாடறாள்ன்னு அர்த்தம்.  ஏன்னா மகள் முதல் வரி வரைக்கும் சொல்லியிருப்போ.  மேற்கொண்டு தாயார் அனுவாதம் பண்ணுகிறாள்.  இப்படி அந்தப் பத்துப் பாசுரங்களிலேயும் பகவானாகவே தம்மை நினைத்துக் கொண்டு நம்மாழ்வார் பாட, அதை தாய் பாவனையிலே வெளியிட்டார்.  இது ஐந்தாம் பத்திலே நடந்தது.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    Comments

    Please wait...
    Sorry, the comment you entered is too long. Please shorten it.
    You didn't enter anything. Please try again.
    Sorry, we can't add your comment right now. Please try again later.
    To add a comment, you need permission from your parent. Ask for permission
    Your parent has turned off comments.
    Sorry, we can't delete your comment right now. Please try again later.
    You've exceeded the maximum number of comments that can be left in one day. Please try again in 24 hours.
    Your account has had the ability to leave comments disabled because our systems indicate that you may be spamming other users. If you believe that your account has been disabled in error please contact Windows Live support.
    Complete the security check below to finish leaving your comment.
    The characters you type in the security check must match the characters in the picture or audio.

    To add a comment, sign in with your Windows Live ID (if you use Hotmail, Messenger, or Xbox LIVE, you have a Windows Live ID). Sign in


    Don't have a Windows Live ID? Sign up

    Trackbacks

    The trackback URL for this entry is:
    http://kaatru.spaces.live.com/blog/cns!8A3636B33FA87F5E!748.trak
    Weblogs that reference this entry
    • None