sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    June 25

    நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 2

    முந்தைய பாகம் – பாகம் 1

    ஆழ்வார் நாயகி பாவத்தில பாடறார்ன்னா, அதற்குள்ள பல பேதங்கள் உண்டு.  வெறும பெண் பாவனையில அவர் பாடிடுறதில்லே.  அதிலே மூன்றாகப் பிரிச்சுக்கிறார்கள்.  தாய்ப் பாசுரம், தோழிப் பாசுரம், மகள் பாசுரம்ன்னு மூன்று.  மகள் பாசுரம்தான் தலைவி.  யார் காதலியோ அவள்.  பகவான்தான் காதலன், நாயகன்.  நாயகி, நம்மாழ்வார்.  நம்மாழ்வார் நாயகின்னா அவருக்குப் பேர் மாறிப் போய்டும்.  அவருக்கு ’பராங்குச நாயகி’ன்னு பேர் வரும்.  இதே திருமங்கையாழ்வாருக்கு நாயகி பாவம்ன்னு வச்சுக்கங்கோ, அவருக்குப் ’பரகால நாயகி’ன்னு பேர் வரும்.  ஏன்னா, நம்மாழ்வாருக்குப் பேர் ’பராங்குசர்’.  அவருடைய பாவனை மாறிப் பெண் பாவனை வருதோல்லையோ?  அப்ப பராங்குச நாயகி.  திருமங்கையாழ்வாருக்குப் பேர் பரகாலன்.  அவருடைய பாவனை மாறி பெண் பாவனை வருதோல்லையோ?  அதனால பரகால நாயகின்னு பேர்.  அப்போ பராங்குச நாயகி, பரகால நாயகி.  இந்த ரெண்டு பேரோட பிரபந்தங்கள் ரொம்பத் தெளிவா இருக்கு.  இதிலே குழப்பமே இல்லே.  இதைத் தவிர இன்னும் ரெண்டு ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.  குலசேகர ஆழ்வாரும் பாடியிருக்கார்.  பெரியாழ்வாரும் பாடியிருக்கார்.  குலசேகரர் பாடினதுல ஒரு வேறுபாடு இருக்கு.  பெரியாழ்வார் பாடினதுல ஒரு வேறுபாடு இருக்கு.  மத்த ரெண்டு பேரும் பார்க்கறச்சே, நாயகியா தங்களை வச்சுனுட்டா, பகவானை நாயகனா வச்சுட்டா, பாடிட்டா.  ஆனால் பெரியாழ்வார் அப்படி அல்ல.  தன்னை யசோதையா வச்சிண்டு, பகவானைக் குழந்தையா நினைச்சினுட்டார்.  அப்போ அது தாய் பாவனைதாய்ங்கிறது இங்க, பகவானுக்கே தாய்.  ஆனா நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாசுரங்களில் தாய்ப் பாசுரம்ன்னு சொன்னது, நாயகியான பெண்ணினுடைய தாயார்.  அதேபோல் காதலியினுடைய தோழிப் பாசுரம் மற்றும் காதலியினுடைய பாசுரம்.

    ஆனா பெரியாழ்வார் அப்படிச் சொல்லலை இப்போ.  கண்ணனையே தன் குழந்தையா நினைச்சினுட்டார்.  யசோதை எப்படி தொட்டிலிட்டு இருப்பளோ, தாலாட்டுப் பாட்டு பாடியிருப்பளோ, பாலூட்டி இருப்பளோ, சோறு ஊட்டிவிட்டிருப்பளோ, குளிப்பாட்டி விட்டிருப்பளோ, பூச்சுட்டி விட்டிருப்பளோ, என்னென பண்ணியிருப்பளோ, பத்துப் பத்துப் பாட்டா பெரியாழ்வார் பாடிட்டார்.  இதுல ‘சீதக் கடலுள் அமுதன்ன தேவகி’ங்கிற பதிகத்தில இருந்து ஆரம்பம்.  கண்ணன் பிறந்த உடனே தொட்டில்ல இட்டுட்டா.  ஊர்க்காரார் எல்லாரையும் கூப்பிட்டு, இதோ கண்ணனைப் பாருங்கோன்னு, அவன் திருவடியிலேர்ந்து ஓரோரு அங்கமா காட்டிண்டு வராளாம்.  யசோதை எல்லாருக்கும் காட்டறா.  பக்கத்துல இருக்கிற வயசானவாளுக்கெல்லாம் கவலை.  குழந்தையோ இவ்வளவு அழகா இருக்கு.  ஊர்ல இருக்கறவாள எல்லாம் நீ கூப்பிட்டுக் கூப்பிட்டு காட்டிண்டிருந்தியானா, எல்லார் கண்ணும் ஒன்னா இருக்குமா?  ஒரு கண்ணு நல்லாயிருக்கும், ஒரு கண்ணு நல்லா இருக்காது.  குழந்தையை ஜாக்கிரதையா வச்சிக்கறத விட்டுட்டு இப்படி எல்லாரையும் பார்க்கச் சொல்றியேன்னு வயசானவா கோவிச்சுக்கறா.  இந்தக் குழந்தைக்கு ஒன்னுமே வராது.  இது அப்பேர்ப்பட்ட குழந்தையா இருக்குன்னு யசோதை எல்லாருக்கும் காட்டிண்டு இருக்கா.  அதனாலே யசோதை பாவனையிலேயே பாடினது.  பிள்ளைத் தமிழ்ன்னு கேள்விப்பட்டிருக்கீளோல்லையோ?  தமிழ் இலக்கியத்துல ஒரு வகை.  பிள்ளைத் தமிழ்ங்கறது குழந்தைகள் என்னென்ன பண்ணுமோ, அத்தனையும் பாடுவதுதான் பிள்ளைத்தமிழ்.  அதிலே இனிப் பாட்டு மிச்சம் இருக்க முடியாது.  அப்படித்தான் பெரியாழ்வார் பாடினார்.  கண்ணன்னு ஒருத்தரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்ன்னால், பெரியாழ்வாருடைய யசோதை பாவனை பாசுரத்தைப் படிக்காமல், என்ன கண்ணனைப் பத்திப் புராணத்தில படிச்சாலும் நாம தெரிஞ்சுக்கவே முடியாது.  ஏன்னா புராணத்தில ரிஷிகள் பாடியிருக்கறதெல்லாம் மறுபடியும் ஆண் பாவனை.  எவ்வளவு பாடிட முடியும் அவாளாலே?  ஆணா இருந்துண்டு எப்படிப் பார்க்க முடியுமோ, அவ்வளவுதான் பாட முடியும்.  ஆனா ஒரு பெண் தன் குழந்தையைப் பார்த்தாப்ல ஆணால பார்க்கறதுக்கே முடியாதோல்லையோ?  அதனால பெரியாழ்வார் பார்த்தார்.  மறுபடியும் என் பாட்டு ரிஷிப்பாட்டா இருக்கறதுக்கு நான் விரும்பலே.  யசோதை எப்படியெல்லாம் அனுபவிச்சிருப்பளோ அப்படி எல்லாம் தானும் பாட வேண்டுமென்று ’பெரியாழ்வார் திருமொழி’யில பாடினார்.  இது ஒரு பக்கம்.

    மற்றொரு பக்கத்துல குலசேகராழ்வார்அவரொரு தனிச்சிறப்போட பாடினார்,  தேவகியாகத் தன்னை நினைத்துக் கொண்டு.  பத்து வருஷம் தேவகி கிருஷ்ணானுபவத்தை இழந்துட்டாளோல்லையோ?  மதுரைப் பட்டணத்தில தேவகிதான் கண்ணனைப் பெற்றாள்.  ஆனா பெத்துக் குடுத்ததோட சரி.  வளர்க்கற பாக்யம் அவளுக்கு கிடைக்கவே இல்லே.  ஏன்னா அன்னைக்கு ராத்திரியே கண்ணன் கிளம்பி யசோதையினுடைய பவனத்துக்குப் போய்ட்டார், அந்தப் பக்கம் கோகுலத்துக்குப் போய்ட்டார்.  வளர்க்க முடியலே.  பத்து வருஷம் கழிச்சு, கம்சனைக் கொன்னுட்டு, தேவகியையும் வசுதேவரையும் சேவிக்கறதுக்காக கண்ணன் ஓடி வரார்.  வந்த சமயத்தில தேவகி கண்ணனைக் கட்டிண்டு அழ ஆரம்பிச்சா.  பத்து வருஷமா எல்லா பாக்யத்தையும் இழந்து போய்ட்டேன்.  எனக்கு மொத்தத்தையும் இப்போ காட்டுன்னா அவள்.  என்ன காட்டணும்ன்னு பத்து வயசு கண்ணன் கேட்கறார்.  நீ தவழ்ந்தது, நீ குளிப்பாட்டினா வர மாட்டேன்னு சொன்னது, நீ பூச்சூடிக் கொண்டது, காளிங்கனை முடித்தது, கோவர்த்தனோர்த்தனம் பண்ணினது, வெண்ணெய் திருடினது, கட்டுப்பட்டது, மொத்துப்பட்ட்து, எல்லாம் பார்க்கணும்.  சொன்னா, வரிசையா ஒன்னொன்னா திரையில ஓடறாப்ல கண்ணன் காட்ட ஆரம்பிச்சுட்டார்.  பத்து வருஷமா தான் என்னென்ன அனுபவங்களை கோகுலத்தில குடுத்தானோ, அது அத்தனையும் தேவகிக்குக் காட்டிண்டு வரார்.  அப்போ அவள் கேட்கறா, நீ பாலுண்டாயாமே?  அதை என்னிடத்தில நீ பாலுண்ணனும், எனக்குக் காட்டனும்ன்னு கேட்கறா.  வயசு கண்ணனுக்குப் பத்து.  தேவகி கடைசிக் குழந்தை பெத்து வருஷம் பத்து ஆச்சு இப்போ.  அவளுக்கு அப்போ பால் சுரந்தது, கண்ணன் குடித்தான்ங்கிறதுதான் சம்ப்ரதாயம். 

    பராசர பட்டர்ன்னு ஆச்சார்யர் இருந்தார்.  அவர் சிஷ்யர் நஞ்சீயர்.  அவர் போய் ஆச்சார்யனிடத்தில கேட்கறார், ’இது நம்பத் தகுந்ததா இல்லையே.  பத்து வருஷம் ஆச்சே குழந்தை பெத்து அவள்.  அவளுக்குப் பால்தான் சுரக்குமா?  இல்லே பத்து வயசுப் பிள்ளைதான் பால்தான் குடிக்குமா?  இது நம்பறாப்ல இல்லையே’ன்னு சிஷ்யன் ஆச்சார்யனைக் கேட்கறார்.  அப்போ அந்த ஸ்வாமி பதில் சொல்றார், ’நீ நினைச்சிண்டு பேசறதெல்லாம் லௌகீக காமத்தைப் பத்தி.  ஆனா நாம பேசிண்டிருக்கறது வைதீக காமத்தைப் பத்தி’.  வேதத்தில இருக்கிற காமம் உண்டு.  நாம லோகத்தில ஆண், பெண் காமம்ன்னு பார்க்கிறோமோல்லையோ?  அது வேதத்திலயும் உண்டு, ஆழ்வார் பாசுரத்திலயும் உண்டு.  ஆனா இந்தக் காமம் உடல் ரீதியான காமமே அல்ல.  பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்டான பரிமாற்றம்.  ரெண்டு ஆத்மாக்கள்.  பரமாத்மா ஒருத்தர், ஜீவாத்மா ஒருத்தர்.  கண்ணன் ராசக்கீரீடை பண்ணினார்ன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம்.  அப்போ பல பெண்கள், ஏற்கனவே கல்யாணம் பண்ணின பெண்களெல்லாம் கண்ணனோடே நாட்டியம் ஆடியிருக்கான்னு கேள்விப்படறோம்.  இதை சுகாச்சார்யாரிடத்தில பரீக்ஷித்தே கேட்டான்.  ‘இது ஒன்னும் நியாயமாப் படலையே எனக்கு. தர்ம சம்ஸ்தாபநாத்தார்ய ஸம்பவாமி யுகே யுகேன்னு கண்ணனே சொல்லிட்டு, அதர்மத்தைப் போய் அவர் பண்ணலாமா’ன்னு பரீக்ஷித்து சுகரிடத்திலே கேட்டான்.  அப்போ அவர் சமாதானம் சொல்றார், ’கண்ணனுக்கு வயசு பத்தே ஆகலே கோகுலத்தில இருக்கறச்சே.  மத்த குழந்தைகளுக்கெல்லாம் வயசு அஞ்சு.  பத்து வயசுப் பிள்ளை, அஞ்சு வயசுக் குழந்தையோட என்ன காமத்தை அனுபவிச்சுற முடியும்?  முதல்ல நீ புரிஞ்சு பேசறியா’ன்னு சுகாச்சார்யர், பரீக்ஷித்தினிடத்தில கேட்டார்.  அப்புறம் அவர் பதில் சொல்றார், ’இந்தப் பரிமாற்றமெல்லாம் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் நடக்கறதே தவிர, இதில சரீர ரீதியான தொடர்பே கிடையாதுன்னு புரிஞ்சுக்கோ’, என்று ஆச்சார்யன் சிஷ்யனுக்குச் சொல்லிண்டிருக்கார்.  அதே நிலையை நாம் இங்கே வச்சுப் பார்க்கணும்.  தேவகிக்குப் பால் சுரந்ததே, கண்ணன் குடித்தானேன்னா, நாம நினைச்சிண்டிருக்கற லோகத்துல இருக்கிற காமம் இது அல்ல.  இது வைதீக காமத்தோடே, பகவான், அவரிடத்தே ஒரு சிஷ்யை பிரார்த்திக்கறச்சே பகவான் அனுபவத்தைக் குடுக்கிறார்ன்னுதான் நாம் கொள்ள வேண்டும்.

    குலசேகரர் ஒரு பாசுரத்தில தெரிவிக்கிறார்.

    தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா *
             தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால் *
    மண்ணில் செம் பொடி ஆடி வந்து * என்றன்
             மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ *
    வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் *
             வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் *
    உண்ணப் பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் *
             என்னை என் செய்யப் பெற்றதெம் மோயே

    (பெருமாள் திருமொழி – 7.6)

    - என்று பெருமாள் திருமொழியில் ஒரு ஆச்சர்யமான பாசுரம்.  கண்ணன் ஆங்காங்கு புழுதி அளைவராம்.  ஊர்ல முழுக்கப் புழுதி ப்ருந்தாவனத்துலே.  எல்லா இடத்துலயும் கையை வச்சு அளைஞ்சுட்டு, தவழ்ந்துட்டு, நேரே திரும்பி வந்து, யசோதை நல்ல புடவையா கட்டிண்டிருந்தா அதை வந்து கட்டிண்டு அழுக்காக்கிடுவர்.  மண்ணில் செம் பொடி – ஊர்ல எல்லாம் செம்பொடி, சிகப்பு வேறே, வெறும் மணலா இருந்தாக்கூட தேவலை.  செம்மண், செம்மண்ணோட ஓடிவந்து தாயாரைக் கட்டினுட்டா, அப்போ புடவை முழுக்க வீணாயிடறதோல்லையோ?  இப்போ தேவகி என்ன ப்ரார்த்திக்கிறாள்ன்னா, அப்படி அவன் கட்டிண்டு யசோதைக்கு புடவை வீணாகிற பாக்கியம் கிடைச்சதாமே, எனக்குக் கிடைக்கலையே.  அவ கேக்கறது அப்படி இப்போ.  ஏன்னா ஒரு குழந்தை வந்து கட்டிண்டதுக்காக புடவை வீணாப் போச்சுன்னு யாராச்சும் நினைச்சுப்பாளா?  குழந்தை வந்து கட்டிக்கலையேங்கிற வருத்தம் இருக்குமோல்லையோ?  மேலே சொல்லுகிறாள் தேவகி, வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – குழந்தைக்குச் சோறு ஊட்டிண்டு இருக்கா யசோதை.  அப்போ அந்தப் பாத்திரத்தில தன் கையை வச்சு வச்சு அளைவராம்.  அதை எடுத்து கண்ணனுக்கு வாயில சோறு ஊட்டிடுறா.  பக்கத்தில வழியறது.  இவளுக்கு ஆசை, தன் குழந்தை எல்லாத்தையும் சாப்பிட்டுடணும்னுட்டு.  இவளுக்கோ ரொம்ப நாளா குழந்தை பெறலே.  ஊர் முழுக்க வெண்ணெயும் பாலும்.  எல்லாத்தையும் அது தலையிலேயே அடைச்சுருவோம், அப்படின்னு வாயில போட்டா அது வழியறது இந்தப் பக்கம்.  யசோதை தனித்து சாப்பிடவே மாட்டாளாம்.  இங்க வழிஞ்சத எடுத்து எடுத்து தான் சாப்பிட்டே பசி ஆறிடுவளாம்.  அப்போ அந்தக் குழந்தையினுடைய பிரசாதமா, கிருஷ்ணப் பிரசாதமா கிடைச்சதாகவும் ஆயிடுத்து.  தன் குழந்தையினிடத்தில அன்பால தான் சாப்பிட்டதாகவும் ஆயிடுத்து.  அதைப்போல உன் வாயில வழிஞ்சத எடுத்து சாப்பிடற பாக்யம் எனக்குக் கிடைக்கலையேன்னு தேவகி அழறா இப்போ.  இந்த பாக்யம் எல்லாம் யசோதைக்குக் கிடைச்சுடுத்தே.  நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே.  இந்த வைபவம் எல்லாம் நந்தகோபாலனுக்குக் கிடைச்சுடுத்து.  ஒன்னுகூட உன்னைப் பெற்ற வசுதேவனுக்குக் கிடைக்கலையோல்லையோ?  நாங்கள் இழந்து போனோமேன்னு தேவகி புலம்பிய புலம்பல்.

    எதுக்குச் சொல்ல வந்தேன்னா, குலசேகர ஆழ்வார் ஒரு பெரிய ஷத்ரியர்.  அவர் ஒரு ராஜா.  ராஜா குலசேகரருக்குப் போய், ஒரு தாயார் குழந்தை அனுபவத்தை இழந்தது தோணி, ஒரு ஷத்ரிய ராஜா எப்படி இருப்பர்ன்னு தெரியும்.  அவர் கையில வில்லுதான் பிடிக்கத் தெரியும், கத்திதான் பிடிக்கத் தெரியும், சண்டைதான் தெரியும்.  அப்படி இருக்கறவர் போய் ஒரு தேவகி என்னென்ன புலம்பியிருப்பளோ அதைப் புலம்பியிருக்கணும்ன்னால் அப்போ இந்த நாயகி பாவம் அவா பேர்ல எவ்வளவு தாக்குதலை ஏற்படுத்தி இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும்.  இதை அவர் குலசேகரரா இருந்து பாடியிருக்க முடியுமா?  நிச்சயமா முடியாது.  குலசேகரரா இருந்தா என்ன பாடுவர்?  இராமனுக்கு யுத்தத்தில சகாயம் வேணும்ன்னா நான் வரேன்னுவர்.  அது வேணா சொல்லிண்டு இருக்கலாமே தவிர, இராமன் இராவணனைக் கொல்லப் போறச்சே ஆளில்லேன்னா நான் வேணா ஜெயிச்சுத் தரேன்னு சொல்லலாம்.  இவ்வளவுதான் பாடமுடியுமே தவிர, குழந்தை கண்ணனிடத்திலே பாலூட்டினதோ, சோறுண்டதையோ பாட முடியாது.  அதனால குலசேகரர் தேவகி புலம்பிய புலம்பலாகப் பத்துப் பாசுரம் பாடினார்.

    இன்னொரு முக்கியப் பத்துப் பாசுரம் அவர் பாடினார்.  கௌசல்யையாத் தன்னை நினைச்சிண்டார்.  நினைச்சினுட்டு திருக்கண்ணபுரம் சவரிப் பெருமாளைப் போய் சேவிச்சார்.  அந்தப் பெருமாளை எப்படி இராமனை தொட்டில்ல போட்டு ஆட்டியிருப்பளோ, அதப்போல தான் தொட்டிலிட்டு தாலாட்டுப் பாடிட்டார்.

    மன்னு புகழ் கௌசலை தன் * மணிவயிறு வாய்த்தவனே *
            தென் இலங்கைக் கோன் முடிகள் * சிந்துவித்தாய்

    - என்று தொடங்குகிற பத்துப் பாசுரங்கள்.

    சுற்றம் எல்லாம் பின் தொடரத் * தொல் கானம் அடைந்தவனே *
          அற்றவர்கட்கரு மருந்தே * அயோத்தி நகர்க்கதிபதியே *
    கற்றவர்கள் தாம் வாழும் * கணபுரத்தென் கருமணியே *
          சிற்றவைதன் சொல் கொண்ட * சீராமா! தாலேலோ

    - (பெருமாள் திருமொழி – 8.6)

    - என்று பத்துப் பாசுரங்களிலும் தாலேலோ, தாலேலோன்னு பாடினார்.  இதுவும் தாய் பாவனை.  பெரியாழ்வார் தாய் பாவனை யசோதையா.  ஆனா இந்த இடத்தில தாய் பாவனை, கௌசல்யையா.  கௌசல்யை இராமனை எப்படித் தொட்டிலிட்டுப் பாடியிருப்பளோ, அதைப்போல பாடினார்.  குலசேகர ஆழ்வாருக்கு இராமன் பேர்லதான் அதீதப் ப்ரீதி.  அவர் வாழ்ந்ததே இராமனுக்காக.  பெருமாள் திருமொழின்னு அவர் பாடியிருக்கிற பிரபந்தத்துக்குப் பேர்.  பெருமாள்ன்னு இராமனுக்குத் திருநாமம்.  அவனைப் பத்தியே பாடினனாலதான் பெருமாள் திருமொழின்னு இந்தத் திவ்யப் பிரபந்தத்துக்கே பேர் வந்தது.  இது குலசேகரரிடத்திலேயும், பெரியாழ்வாரிடத்திலேயும் இருந்த மாறுதல்.  தாய் பாவனையில பாடினா, அப்படிங்கறதுக்காக.  ஏன்னா சாதாரணமா நாயகி பாவம்ன்னால், நாயகியாத்தான் பாடணும்.  ஆனா இந்த இடத்தில மட்டும் தாய்ப் பாசுரமா பாடியிருக்கா.

    முக்கியமா நாம பார்க்க வேண்டியது, பராங்குச நாயகி எப்படி பாடியிருக்கா?  பரகால நாயகி எப்படி பாடியுள்ளார்?  இவா ரெண்டு பேருக்கும்தான் என்னைக்குமே போட்டி, ஆரோக்யமான போட்டி. சண்டையில்லே.  பத்துப் பத்துக்கள் பாடியிருக்காரே.  இதில என்ன நாயகி பாவத்தோட பாடுவர்ன்னா, அதை நாம சில வர்க்கங்களாப் பிரிச்சுனுடலாம்.  ஒன்று, விரக தாபத்திலே துடிப்பர்கள்.  அது ரொம்ப முக்கியமான பதிகங்கள்.  விரக தாபம்ங்கிறது நாயகனை விட்டுப் பிரிந்து, அவனோட அனுபவம் கிடைக்காம நாயகி துடிக்கிறாளோல்லையோ, இந்த விரக தாபத்தில பாடுறது பல பாசுரம்.  தூது விடுதல் பல பாசுரம்.  நாயகன் எங்கேயோ இருப்பர்.  நாயகி எங்கேயோ இருப்பள்.  பறவைகளைப் பிடித்து நீ போய் என் விஷயத்தை பகவானிடத்தில சொல்லு, அப்படின்னு தூது விடறது ரெண்டாவது வகை.  மூன்றாவது வகை, மடலெடுத்தல்.

    மடலெடுத்தல்ங்கிறது அந்த நாள்ல இருந்த ஒரு வழக்கம்.  தமிழ் இலக்கியம் எப்படி இருந்ததுன்னு சொல்றேன், சம்ஸ்கிருத இலக்கியம் எப்படி இருந்ததுன்னு சொல்றேன்.  ஆழ்வார்கள் எப்படிப் பின்பற்றி இருக்காங்கிறதைச் சொல்றேன்.  நம்மாழ்வாரும் மடலெடுத்திருக்கார்.  திருமங்கையாழ்வாரும் மடலெடுத்திருக்கார்.  மடல் எடுத்தல் என்றால், மடல்ங்கிறது பனை மடல்.  பனை ஓலை இருக்கோல்லையோ, அதுல என்ன மடல் இருக்கோ அதை எடுத்துக்கணும்.  எடுத்துட்டு தான் யாரை ஆசைப்பட்டோமோ, அவனுடைய படத்தை வரைஞ்சுக்கணும்.  வரைஞ்சுட்டு, பனை மடலாலேயே ஒரு குதிரை பொம்மை கட்டணும்.  கட்டிட்டு, அந்தக் குதிரைக்கு மேலே ஏறி உட்கார்ந்துட்டு, பொம்மைக் குதிரை, அதை நாலு பிள்ளைகளைப் பிடிச்சு இழுக்கச் சொல்லணும்.  அந்த ஊரில தெருத்தெருவா சுற்றி வந்து, நான் இன்னாரைக் காதலிச்சேன்.  ஆனா அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மறுத்துட்டார்.  அவரை இழந்து நான் இப்படித் துடிக்கிறேன்ங்கிறத அதுக்குரிய பாட்டைச் சொல்லிண்டே போகணும்.  எதுக்கு இதப் பண்ணுவாள்ன்னா, ஒருவேளை அவனுக்கே கண்ணுல பட்டு, ஓ, இவ்வளவு ஆசை இருக்கு போலருக்குன்னு அவனோ, அவளோ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலாம்.  இல்லே, ராஜா கண்ல பட்டுட்டு, ஏன் ஒழுங்கான பெண்ணைப் பிள்ளையோட கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்கறீள், அப்படினுட்டு ராஜா குறுக்க பூந்து சரி பண்ணி வைக்கலாம்.  இல்லே பெற்றோர்களுக்கே மனசு மாறி சரிபடுத்தி வைக்கலாம்.  இது எதானும் ஒன்று நடக்குமாங்கிற ஆசையிலதான் மடல் எடுப்பர்கள்.  இந்த மடல் எடுக்கறதை, நம்மாழ்வாரும் மடல் எடுத்திருக்கார், திருமங்கையாழ்வாரும் மடல் எடுத்திருக்கார்.  இவர் பிரபந்தம் அவர் பிரபந்தம் ரெண்டுமே சொல்றேன்.

    அப்போ விரக தாபத்தில் பாடுவது, தூது விடுவது, மடலெடுப்பது, அடுத்து அனுகாரம் பண்ணுவது.  அனுகாரம்ன்னா, பகவான் இருக்க மாட்டார்.  ஆனா அவர் இல்லேங்கற ஆற்றாமையைத் தனிச்சுக்கணுமோல்லையோ?  விரகதாபத்தைத் தணித்துக் கொள்ளுவதற்கு என்ன பண்ணலாம்?  அவர் இருக்கறாப்லயே நினைச்சுக்கறது.  அப்போ பாட்டு அவர் பக்கத்தில இருக்கறாப்ல நினைச்சிண்டு பாடிடுவா.  இன்னும் ஒரு படி மேல போச்சுன்னா, தங்களையே அவனா நினைச்சிண்டு பாடிடுவா.  தானேதான் பகவான்னு நினைச்சுக்கறது.  அவர் என்னென்ன சேஷ்டிதமெல்லாம் பண்ணியிருப்பரோ, அதெல்லாம் தானே பண்ணினதுன்னு நினைச்சுக்கறது.  இதுக்கு அனுகாரம்ன்னு பேர்.

    அடுத்த வகை, ஐந்தாவது வகை, ஊடல் வகை.  ஊடல்ங்கிறது பொய்க்கோபம்.  ’ப்ரநய ரோஷம்’ன்னு அதுக்குப் பேர்.  ப்ரநயம்ன்னால் காதல், அன்பு.  ரோஷம்ன்னாக் கோபம்.  அன்பின் வெளிப்பாடான கோபம்.  இது ப்ரநய ரோஷம்.  நிஜக்கோபமில்லே.  ப்ரநய ரோஷத்துக்கு மட்டும் இன்னைக்கும் திவ்யதேசங்களிலே நடக்கறது.  அன்னைக்கு ஆழ்வார்கள் எப்படி ப்ரநய ரோஷத்தோட பாடினார்களோ, இன்னைக்கும் அதுக்கு ‘மட்டையடி உத்சவம்’ன்னு கோயில்களிலே பேர்.  பங்குனி உத்திரத்தன்னிக்கு காத்தால போனீள்ன்னா இன்னைக்கும் அந்த உத்சவம் ஸ்ரீரங்கத்தில நடக்கறது.  நம்பெருமாள் எட்டு வீதி எழுந்தருளிட்டு கோவிலுக்குள்ள வருவர்.  நாச்சியார் சன்னிதி வடக்கு வாசல்லே.  நாச்சியார் சன்னிதிக்குள்ள போறதுக்காக பல்லக்கோட வருவர்.  பெரிய கதவை தடால்ன்னு சாத்திடுவா.  சாத்தின உடனே பெருமாளால உள்ள போக முடியாது, பல்லக்கோட திரும்ப வருவர்.  இன்னொருதரம் போகப் பார்ப்பர், கதவை சாத்திடுவா.  இன்னொருதரம் போகப் பார்ப்பர், கதவை சாத்திடுவா.  அதுக்கப்புறம் என்ன நடந்தது பெருமாளுக்குத் தெரியாது, வெளிய நின்னுடுவர்.  நடுவுல அரையர் ஸ்வாமி, அவாளுக்கு ’விண்ணப்பம் செய்தார்’ன்னு பேர்.  தாளம் வைத்துக் கொண்டு ஆழ்வார்களுடைய பாசுரங்களை அவாதான் பாடுவா.  அவா போய்ப் பெருமாள்கிட்ட என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு தாயார் சன்னிதியில போய்ச் சொல்லுவா.  தாயார்கிட்ட உமக்கு என்ன கோபம்ன்னு கேட்டுகிட்டு பெருமாள்கிட்ட வந்து சொல்லுவா.  அப்போ தாயார் பெருமாள்கிட்டே ’நாம் இனி இவரை மன்னிக்கிறதா இல்லே. எங்க போய்ட்டு வந்தார்ன்னு கேளு’ன்னு தாயார் சொல்லுவா.  அப்போ பெருமாள், ‘எங்க போய்ட்டு வருவேன்?  நான் எல்லாரையும், ஆஸ்ருதர்களை இரட்சிக்கறதுக்காக, ஹிரண்யகசிபுவைக் கொல்லணும், ஹிரண்யாட்சனைக் கொல்லணும், சிசுபாலனைக் கொல்லணும், இராவணனைக் கொல்லணும், எவ்வளவு வேலை இருக்கு.  இதுக்காகத்தான் எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்தேன்’னுவர்.  ‘இருக்கட்டும், ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க எழுந்தருளியிருந்தார்ன்னு கேள்’.  இந்தப் பங்குனி உத்திர உத்சவத்திலே இது ஒன்பதாம் உத்சவம்.  இப்ப சொல்றது ஒன்பதாம் திருநாள் அன்னிக்கு நடக்கிற உத்சவம். 

    ஆறாம் திருநாள் அன்னிக்கு, பக்கத்துல உறையூர்ன்னு திவ்யதேசம்.  கமலவல்லி நாச்சியார்ன்னு கேள்விப்பட்டிருப்பீள்.  ரொம்ப ஆச்சர்யமான திவ்யதேசம்.  உறையூருக்கு இன்னொரு சிறப்பு, திருப்பாணாழ்வாருடைய அவதார ஸ்தலம்.  இந்த உறையூருக்கு நாச்சியாருடன் சேர்த்திக்காக இவர் போயிருப்பர்.  நம்பெருமாளுக்கு உறையூர் நாச்சியார் சேர்த்தி ஒருநாள்.  ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி, பங்குனி உத்திரத்தில ஒன்பதாம் திருநாள்சேரகுலவல்லி நாச்சியார், இப்ப குலசேகர ஆழ்வார்ன்னு சொன்னேனே, அவளுக்குச் சேரகுலவல்லின்னு ஒரு மகள்.  அந்த மகளை நம்பெருமாளுக்கு, திருவரங்கநாதனுக்குத்தான் கல்யாணம் பண்ணிக் குடுத்தார்.  அது ஸ்ரீராம நவமி அன்னிக்கு இன்னைக்கும் அவளோட சேர்த்தி நடக்கிறது.  அதனால ஸ்ரீரங்கத்துல நம்பெருமாளுக்கு மூன்று தாயார்களோட சேர்த்தி, வெவ்வேறு நாட்களிலே.  இது ஆறாம் திருநாளன்னிக்கு உறையூர் எழுந்தருளிட்டுத் திரும்ப வருவர்.  அப்போ நாச்சியாருக்குக் கோபம்.  அங்கு போயிருந்தீர், ஏன் போயிருந்தீர், வர வேண்டாம்ன்னு கோபித்துக் கொள்ளுவர்.  அப்போ பதில் சொல்லுவர், ‘அதுக்கப்புறம் எத்தனை வேலை இருந்தது எனக்கு.  நீ என்னமோ என் உடம்பில ரத்தக்கறை தெரியறது, அப்படியே நகக்கீறல் தெரியறதே, புஷ்பத்தினுடைய தாதுக்களெல்லாம் உடம்புல தெரியறது, குங்குமப்பூ தெரியறது.  இது எல்லாம் என்னத்துக்காகன்னு தாயார் கேட்பர்.  அப்போ பெருமான் சொல்லுவர், வழியில எத்தனையோ இராட்சசர்களையும், அசுரர்களையும் முடித்துவிட்டு, நாம் குதிரைநம்பிரான் பேரிலே ஆரோகணித்து உம்மைக் காணவேண்டுமென்ற வேகமான ஆதுரத்தோடே வந்தோம்.  எத்தனை பெண்களெல்லாம் பாரிஜாத புஷ்பம் குடுத்தா தெரியுமா?  பிராட்டி பக்கத்தில இல்லாத அணிஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்.  எத்தனை பேர் குங்குமப்பூ சமர்ப்பித்தா தெரியுமா?  அவள் இல்லாமல் நான் அலங்காரமே பண்ணிக்கறதில்லேன்னு சொல்லிட்டு வந்தேன்.  அப்படி இருக்கறச்சே உனக்கு இந்தக் கோபம் கூடுமோ?  ஏன் கண் சிவந்திருக்குன்னு கேட்டீரே?  வெகு நாட்களாக இராக்ஷசர்களோட யுத்தம் புரிஞ்சுருக்கேன். கண் சிவந்தது.  உம்மையும், உன் குழந்தைகளையும் இரக்ஷிக்கத்தானே இவ்வளவு பாடும் நாம் படறோம், என்று தாம் பண்ணினதெல்லாத்தையும் பெருமாள் சொல்லுவர்.  அரையர் ஸ்வாமி போய் எல்லாத்தையும் நாச்சியாரிடத்தில சொல்லிட்டு, கொஞ்சம் உள்ளம் இரங்கும் அவளுக்கு.  ஆனாலும் சுலபத்துல ஏத்துனுட மாட்டா. 

    அதுக்கப்புறம்தான் நடுவுல நம்மாழ்வார் விக்ரஹ ரூபத்தில இருக்கறார்.  அவர் குறுக்க வருவர்.  இவா ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டுருந்தா நமக்குன்னா ஆபத்து இப்போ?  இவா சேர்ந்து இருந்தாத்தான் நம்மளை இரட்சிக்க முடியும்.  தாயாருக்கே பெருமாள்கிட்ட கோபம்ன்னா?  பெருமாளுக்குக் கோபம் வந்தா தாயார்கிட்டப் போகலாம்.  தாயாருக்கே கோபம்ன்னா, அப்புறம் யார்கிட்டப் போறது?  வேண்டாம், அனர்த்தத்தில கொண்டு போய் விட்டுடும்னுட்டு, நம்மாழ்வார் நேர பெருமாள்கிட்டப் போகனும், போக மாட்டார்.  தாயார்கிட்டப் போய்ட்டு, ‘அவர்தான் ஏதோ பேசிண்டிருக்கார்ன்னா, தேவரீர் கோபித்துக் கொண்டால் உலகம் தாங்குமா?  நமக்காக தேவரீர் பொறுத்தருள வேண்டும்’, அப்படின்னு பிரார்த்திக்க, அப்ப நாச்சியார், அங்க பெரிய கோஷ்டி இருக்கும்.  ஆயிரக்கணக்கான ஜனங்கள் நின்னுண்டிருப்பா.  ‘நம்முடைய பெரியன் நம்மாழ்வார் சொன்னதுக்காக இந்த நம்பெருமாளைப் பொறுத்தோம்’, அப்படின்னு தாயார் ஒத்துப்பள்.  அதுக்கப்புறம் நம்பெருமாள் சன்னிதிக் கதவைத் திறந்து உள்ளுக்குள்ள போய் மத்தியானம் ஒன்னரை மணிக்கு சேர்த்தி.  ஒரே சிம்மாசனத்தில் தாயாரும், பெருமாளுக்கும் அன்னைக்குத்தான் சேர்த்தி நடக்கும்.  அன்னைக்கு இராத்திரிதான் இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்து கத்யத்ரேயம் சாதித்தார்.  ஏன்னா பிராட்டி பக்கத்தில இருக்கறச்சே சரணாகதி பண்ணினாதான் சுலபமா பலிக்கும்.  அதனாலதான் அன்னைக்குத் தேர்ந்தெடுத்து ஸ்வாமி பண்ணினார்.  அப்போ அன்னைக்கு நடந்ததுதான் பிரணயகலக உத்சவம்.  அதுக்கு மட்டையடி உத்சவம்ன்னும் பேர்.  மட்டையடி உத்சவம்ன்னா இந்தப் பெருமாள் உள்ள வரார் பாருங்கோ, வரச்செ சட்டி நிறைய தயிர், பால், வெண்ணெய் எல்லாத்தையும் இந்த நாச்சியார் சன்னிதிக்காரா வச்சுப்பா.  வச்சுக்கிட்டு வரும் போது வீசி வீசி அவன் பேரில அடிப்பா.  யாரெல்லாம் அந்தப் பல்லக்கைத் தூக்கிட்டு வராளோ, அவா அத்தனை பேரும் அதில் குளிக்க வேண்டியதுதான்.  பெருமான் பேரிலயும் அது படும்.  அங்க இருக்கற எல்லாருமே நனைஞ்சுட்டுத்தான் கிளம்பிப் போயாகணும்.  அப்ப அந்த பிரணய ரோஷத்துக்குத்தான் ஊடல்ன்னு பேர்.  பொய்க்கோபம்தானே, நிஜமான கோபம் அல்ல.  அன்பின் வெளிப்பாட்டாலே, அன்பின் மிகுதியாலே பிறந்த கோபம்.  அந்தக் கோபம் முடிந்த பிற்பாடுதான் சேர்த்தி நடக்கும்.  அன்னைக்கு ஒருநாள் மட்டும்தான் ரெண்டு பேரும் ஒரே சிம்மாசனத்தில எழுந்தருளி இருப்பர்கள்.  மற்ற நாளெல்லாம் நம்பெருமாள் வேற சன்னிதிதான், தாயார் வேற சன்னிதிதான்.

    அதனாலே பிரணய ரோஷ நிலையிலும் ஆழ்வார்கள் பாடுவர்.  பெருமானை வரலையே, வரலையேன்னு தூதுவிட்டுட்டு, அவன் வந்திருக்கச்சே கோவிச்சுனுடுவா.  தூதுவிட்டுப் பறவை போய் பகவான்கிட்டச் சொல்லும்.  அவரும் சரின்னு அலை குலையத், தலை குலைய ஓடி வருவர்.  வந்துட்டுப் பார்த்தா இவர் உள்ளேயே விடமாட்டார், வாசல்லயே நிறுத்தி வச்சுருவர்.  அவர் ஒன்னும் போகல்லாம் மாட்டார்.  அவர் நின்னு எப்படி அனுகிரகிக்கணுமோ, ஆழ்வாரோடே சேர்ந்த பிற்பாடுதான் பெருமாள் புறப்படுகிறார்.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    Comments

    Please wait...
    Sorry, the comment you entered is too long. Please shorten it.
    You didn't enter anything. Please try again.
    Sorry, we can't add your comment right now. Please try again later.
    To add a comment, you need permission from your parent. Ask for permission
    Your parent has turned off comments.
    Sorry, we can't delete your comment right now. Please try again later.
    You've exceeded the maximum number of comments that can be left in one day. Please try again in 24 hours.
    Your account has had the ability to leave comments disabled because our systems indicate that you may be spamming other users. If you believe that your account has been disabled in error please contact Windows Live support.
    Complete the security check below to finish leaving your comment.
    The characters you type in the security check must match the characters in the picture or audio.

    To add a comment, sign in with your Windows Live ID (if you use Hotmail, Messenger, or Xbox LIVE, you have a Windows Live ID). Sign in


    Don't have a Windows Live ID? Sign up

    Trackbacks

    The trackback URL for this entry is:
    http://kaatru.spaces.live.com/blog/cns!8A3636B33FA87F5E!746.trak
    Weblogs that reference this entry
    • None